Sunday, March 14, 2010

சுதந்திர ஊடகவியலாளர் மகிந்த ரத்னாயக்கவை கடத்த முயற்சி

வெள்ளை வேனில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் சுதந்திர ஊடகவியலாளர் மகிந்த ரத்னாயக்கவை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் நேற்று மாலை தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிச் செல்லும்போதே அவர் இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார். மகிந்த ரத்னாயக்க சிறப்பு அரசியல் கட்டுரையாளர் என்பதுடன் லங்கா டிசென்ட் இணையத்தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

அத்துடன், மங்கள சமரவீர தலைமையிலான எமது தேசிய முன்னணியின் செயற்பாட்டு ரீதியான உறுப்பினராக்கவுமிருந்துவருகிர்றார். இம்முறை பொதுத் தேர்தலில் 18 மாவட்டங்களில் போட்டியிடும் எமது தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளராகவும் மகிந்த ராத்னாயக்கவை பெயரிட்டுள்ளது. தேர்தல் ஆணையாளருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கட்சியின் பிரதிநிதியாக அவர் கலந்துகொண்டுள்ளார்.

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு முச்சக்கர வண்டியொன்றில் கட்சி அலுவலகத்திற்குத் திரும்பிகொண்டிருந்த போது வெள்ளை வானில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் முச்சக்கர வண்டிக்குக் குறுக்கே வாகனத்தை நிறுத்தியதுடன் அதில் ரத்னாயக்கவைப் பலவந்தமாக ஏற்ற முயற்சித்துள்ளனர்.

இதன்போது அருகில் இருந்தவர்கள் தலையிட்டதாலும், முச்சக்கர வண்டி சாரதியின் திறமையின் காரணமாகவும் அவர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளார். எமது தேசிய முன்னணியின் மேலும் இரண்டு அதிகாரிகள் கடந்த வாரத்தில் அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்ல முயற்சித்ததாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment