Tuesday, January 12, 2010

எனது கணவரும் உங்களது நண்பருமான லசந்த கொல்லப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது ஜனாதிபதி அவர்களே நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன் ‐ சொனாலி

இன்று ஜனவரி 08, 2010. அலுவலகத்திற்குச் செல்லும் போது பட்டப்பகலில் நட்டநடுத்தெருவில் வைத்து எனது கணவரும் உங்களது நண்பருமான லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. 2005இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இற்றை வரை 15க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளில் ஒன்று பற்றிக்கூட உரிய விசாரணைகள் நடைபெறவில்லை. லசந்த குறிப்பிட்டதைப் போன்று சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அரசுகளுக்கு அது எங்கென்றாலும் படுகொலை தான் அதன் அடிப்படை ஆயுதமாக இருக்கும். இறுதியில் நான் கொல்லப்படுவேன். அரசாங்கமே என்னைக் கொல்லும் என்று லசந்த தனது இறுதி ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். லசந்தவின் படுகொலை மட்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்படவில்லை என்றில்லை. அவருடைய வீடு தாக்கப்பட்டது குறித்தோ, சண்டே லீடர் அச்சகம் தாக்குதலுக்குள்ளானது குறித்தோ கூட விசாரணைகள் எதுவும் நடாத்தப்படவில்லை.


பல்வேறு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது அல்லது அச்சுறுத்தப்பட்டது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இதன்காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். எஞ்சியோர் பலவந்தப்படுத்தப்பட்டு அடிபணிய வைக்கப்பட்டுள்ளார்கள். எமது நாட்டின் வரலாற்றிலேயே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இப்போதையைப் போல் ஒரு போதும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது இல்லை. இவ்வாறு கீழ்ப்பணிய வைக்கப்பட்ட ஊடகங்கள் உங்களதும் உங்களது சகோதரரர்களதும் ஊதுகுழல்களாக மாற்றப்பட்டன. அவ்வாறில்லாதவர்களை கடுமையான அடக்குமுறைச் சட்டங்களைப் பிரயோகித்து சிறையிலடைத்தீர்கள். அதன் விளைவாக ஒரு ஊடகவியலாளர் 20 வருட கடூழியச் சிறைத்தண்டனைக்குள்ளாகியுள்ளார்.


லசந்த படுகொலை செய்யப்பட்டு 12 மாதங்கள் கடந்தும் அப்படுகொலை பற்றி எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. படுகொலையாளிகள் சீருடை அணிந்து ஒரேவகையான மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். எனினும் இது குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான எத்தகைய முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.


இது தவிர லசந்தவின் படுகொலையாளிகள் குறித்த நேரத்தில் பல்வேறு கைத்தொலைபேசித் தொடர்புகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த தொலைபேசி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அவ்விலக்கங்களைப் பெற்றாலே கொலையாளிகளைக் கண்டு பிடித்து விட முடியும். ஆனால் பொலிஸார் இதற்குப் பதிலாக லசந்தவின் தொலைபேசியைக் கைப்பற்றி லசந்த தொடர்பு கொண்டிருந்த தகவல் மூலங்களைக் கண்டுபிடிக்கவே முயற்சி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பல்வேறு தரப்பினரை விசாரித்தாகப் பொலிஸார் தெரிவித்தாலும் படுகொலை குறித்த சரியான விவரங்களுக்கு அவர்களால் வர முடியவில்லை. உதாரணமாக லசந்த துப்பாக்கிச் சூட்டினாலேயே மரணமானதாக அவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து வெற்றுத் துப்பாக்கிரவைகள் பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், லசந்தவின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக்கான எவ்வித ஆதாரங்களும் காணப்படவில்லை. எக்ஸ்ரே அறிக்கையில் கூட அதற்கான எத்தகைய தடயங்களும் காணப்படவில்லை. இது ஒன்றே இக்கொலையை மூடி மறைக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.


லசந்த படுகொலையான போது லசந்த உங்களுடைய நண்பன் நீங்கள் அடிக்கடி அவரைச் சந்திப்பீர்கள் என்று நீங்கள் சொன்னது மட்டுமல்ல உரிய விசாரணைகள் நடாத்தப்படும் என்றும் தெரிவித்து உங்கள் தாராள குணத்தையும் வெளிப்படுத்தி இருந்தீர்கள். ஆனால் மறுபுறத்தில் லசந்த உங்களுக்கு ஒரு தொந்தரவான ஆள் என்பதையும் அறிந்திருந்தீர்கள். சுனாமி நிதியாக மக்களால் வழங்கப்பட்ட நன்கொடையான ஹெல்பிங் அம்பாந்தோட்டை நிதியை தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றி மேற்கொள்ளப்பட்ட மோசடியை லசந்த வெளிக் கொண்டு வந்திருந்தார். லசந்த படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடமாகியும் எந்தவொரு விசாரணையும் நடைபெறாததும் சர்வதேச ஊடகவியலாளர் ஒருவரின் தொலைக்காட்சி நேர்காணலில் பாதுகாப்பு செயலாளரும் தங்களது சகோதரருமான கோட்டபாய ராஜபக்ச லசந்த என்பவர் யார்? என்று கேள்வியெழுப்பியதும் தங்களது இந்த நான்கு வருட ஆட்சியின் லட்சணத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.


தான் கொலை செய்யப்படுவேன் என்பதை லசந்த நன்றாக அறிந்திருந்தார். தன்னை யார் கொலை செய்வார்கள் என்பதை அறிந்தும் இருந்தார். அவர் மரணத்திற்கு அஞ்சவில்லை. அவர் பாதுகாப்புக் கோரவில்லை. புல்லட் புரூப்களையோ, குண்டு துளைக்காத வாகனங்களையோ அவர் கோரவில்லை.

இதனை அவர் தனது இறுதி ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"எனது மரணத்தின் பின்னர், வழமை போலவே பகட்டுத்தனமான விசாரணைக்கு உத்தரவிடுவீர்கள் என்றும் காவல்துறையினர் முழுமையான விசாரணையினை மேற்கொள்வார்கள் என்றும் நான் அறிவேன். ஆனால், கடந்த காலத்தில் நீங்கள் கட்டளையிட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இந்த விசாரணையின் பலனாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. எனது மரணத்தின் பின்னால் யார் இருந்து செயற்பட்டார்கள் என்பதை நாம் இருவரும் அறிவோம். ஆனால் அவரது பெயரை உச்சரிக்கத் துணியமாட்டோம். எனது வாழ்வு மாத்திரமல்ல, உங்களது வாழ்வும் இதில்தான் தங்கியிருக்கிறது. என்னுடைய கொலையாளிகளைப் பாதுகாப்பதைத் தவிர தங்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் இருக்கப் போவதில்லை."

லசந்தவின் வாழ்வு உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. அவர் இறந்த பின்னரும்கூட யுனெஸ்கோ, உலக ஊடக சுதந்திர விருது உட்பட பல்வேறு முக்கியமான ஐந்து விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். அவருடைய பணிகள் உலகத்தவரை ஈர்த்துள்ளன. நவீன கலைகளுக்காக வியன்னாவில் உள்ள நூதனசாலையின் முன்பாக லசந்தவின் கீழ்ப்படியாத அச்சமற்ற ஊடகப் பணிக்காக அவரை நினைவு கூரும் வகையில் ஒஸ்ரேலியக்கட்டிட வடிவமைப்பாளரும் சிற்பியுமான பீற்றர் சான்ட்பிச்லரால் நினைவுச் சின்னமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஒரு சின்னஞ்சிறிய நாடான எமது நாட்டிலிருந்து ஊடக சுதந்திரத்திற்காகப் போராடிய ஒருவருக்குக் கிடைத்துள்ளது. உங்களது பூரண கட்டுப்பாட்டில் உள்ள அரச ஊடகங்கள் இவை பற்றி ஒரு வித அறிக்கையிடலையும் செய்யவில்லை. இத்தகைய விடயங்கள் லசந்தவின் கொலைக்கு யார் காரணம் என்பதை புலப்படுத்தி நிற்கின்றன.


இவற்றுக்கு அப்பால் ஏப்ரல் 24, 2009 அன்று லசந்தவின் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமதுங்கவுக்கு அவருடைய ஆதரவு கோரியும் கடிதம் அனுப்பியிருந்தேன். ஓரு வருடமாகியும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கையும் இடம் பெறவில்லை. இப்போது ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய தருணத்தில் ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் லசந்தவின் படுகொலை ஒரு பேசு பொருளாகியுள்ளது. உங்கள் அரசியல் சேர்க்கஸ்களால் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணையை தவிர்த்துவிட முடியாது.


காலம்கடந்த இந்த நேரத்திலும் நான் தங்களிடம் கேட்டுக் கொள்வது இப்போதாது லசந்தவின் படுகொலை தொடர்பாக ஒரு நீதியான விசாரணையை நடாத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே. முறையான விசாரணை நடாத்தப்படாத இந்த 12 மாதத்திலும் உள்நாட்டு மக்களும் சர்வதேசமும் லசந்தவின் படுகொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பாக தமது முடிவை வந்தடைந்திருப்பார்கள்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்கள் வந்தடைந்துள்ள முடிவு தவறு என்று நிரூபிப்பதாகும். ஜனாதிபதி அவர்களே நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன் முடிந்தால் அவர்கள் வந்தடைந்துள்ள முடிவு தவறு என்று நிரூபியுங்கள்.


தங்கள் உண்மையுள்ள

சொனாலி சமரசிங்க விக்ரமதுங்க

No comments:

Post a Comment